ஷா ஆலம், நவ 3- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் மத்தியிலும் தெற்கிலும் ஹராப்பான் கூட்டணி வெற்றி எளிதாக பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எனினும் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தொகுதிகளை வெல்வதில் கடுமையான பலப்பரீட்சையை அக்கூட்டணி எதிர் நோக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமது சாபு கூறினார்.
வெற்றியும் வாக்குகளின் எண்ணிக்கையும் சமநிலையில் இருக்காது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். சில இங்களில் குறிப்பாக சிலாங்கூரின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் எளிதாக வெல்ல முடியும்.
அதே சமயம் மாநிலத்தின் வட பகுதியில் நாம் கடுமையான போட்டியை எதிர்நோக்க நேரிடும். ஆகவே, வட பகுதி தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக நாம் சக்தி, நிதிவளம் மற்றும் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
கடுமையான போட்டி நிலவக்கூடிய மாநிலத்தின் வட பகுதி நாடாளுமன்றத் தொகுதிகளாக கோல சிலாங்கூர், தஞ்சோங் காராங், சுங்கை பெசார், சபாக் பெர்ணம் ஆகியவை விளங்குகின்றன.
நேற்றிரவு இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் ஹராப்பான் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய போது முகமது சாபு இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவது போன்ற நடவடிக்கைளிலிருந்து ஒதுங்கியிருக்கும்படி ஹராப்பான் வேட்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.








