ஷா ஆலம், நவ 3- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மாநில அரசின் கொள்கைகளை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அமல்படுத்தும்.
மாநில அரசு அமல்படுத்திய மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம், ரூமா இடாமான், ரூமா சிலாங்கூர் கூ வீட்டுமைத் திட்டங்கள், சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டம் (இன்சான்) போன்றவை வெற்றிகரமான பலனைத் தந்துள்ளன என்று மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வசதியான வீட்டுடமைத் திட்டம் குறித்து பேசினால், சிலாங்கூரில் நமது கொள்கைகள் வழி நிரூபித்துள்ளோம். புத்ரா ஜெயாவை ஒரு தவணை காலத்திற்கு ஆள்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தால் இளம் தலைமுறையினருக்கும் ஒட்டு மொத்த மலேசியர்களுக்கான வீட்டுடமைக் கொள்கை மிகவும் சிறப்பானதாக அமையும் என அவர் சொன்னார்.
அதே போல், சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொது காப்புறுதித் திட்டத்தை குறிப்பிடலாம். இத்தகைய திட்டத்தை எந்த பிரதேசமோ அல்லது ஆசியாவிலுள்ள எந்த நாடோ இலவசமாக மேற்கொண்டதாக நான் கருதவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தாமதம் ஆனாலும் இறைவன் அருளால் இத்திட்டத்தை நாம் அமல்படுத்தி விட்டோம் என்று சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.
கௌரவத்தை நிலைநாட்டுவதற்கும் நாட்டை வலுப்படுத்துவதற்கும் இந்த கூட்டணிக்கு இம்முறை வாய்ப்பு கிட்டியுள்ளதாக கோம்பாக் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளரான அமிருடின் தெரிவித்தார்.
வரும் நவம்பர் 5 முதல் 19 வரை நாட்டின் கௌரவத்தை மீட்டெடுப்பதற்குரிய பொறுப்பு நமக்கு உள்ளது. துரோகிகள் மற்றும் கொள்ளையர்களை இனியும் சார்ந்திராமல் நாட்டை நாமே இனி ஆள வேண்டும் என அவர் சொன்னார்.







