ஷா ஆலம், நவ 1- வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக கிள்ளான் ஆற்றின் 56 கிலோ மீட்டர் பகுதியை ஆழப்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் பணி நேற்று தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
சுமார் 70 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் நான்கு பிரிவுகளைக் உள்ளடக்கிய இந்த திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் பூர்த்தியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முதல் கட்டமாக தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பையொட்டிய 10 கிலோ மீட்டர் பகுதியில் ஆற்றை மூன்று மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தின் வாயிலாக வெள்ள அபாயத்தை எதிர்நோக்கி வரும் தாமான் ஸ்ரீ மூடா, புக்கிட் லஞ்சோங், கம்போங் தெங்கா மற்றும் கம்போங் பாரு ஐக்கோம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 500,000 பேர் பயனடைவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கட்டமைப்பு மற்றும் லண்டாசான் லுமாயான் நிறுவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் ஆண்டு இறுதிக்குள் 20 முதல் 30 விழுக்காடு வரை பூர்த்தியாகும் என்றார் அவர்.
இன்று இங்கு ஆற்றை ஆழப்படுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரின் மிட்வேலி தொடங்கி கோலக் கிள்ளான் வரையிலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆற்றை ஆழப்படுத்தும் திட்டத்தின் மூலம் ஆற்றில் நீரின் கொள்ளளவை அதிகரிக்கவும் அதன் மூலம் வெள்ளப் பிரச்னையை குறைக்கவும் இயலும் என அவர் சொன்னார்.







