ஷா ஆலம், நவ 1- சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகாவினால் (ஜே.பி.ஜே.) பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஹோண்டா இண்ட்ரேகா ரகக் கார் மிக அதிகமாக அதாவது 58,000 வெள்ளிக்கு ஏலம் போனது.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஜீப், வேன், லோரி மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட 135 வாகனங்கள் ஏலமிடப்பட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் உரிமையாளர்களால் கோரப்படாததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் டத்தோ கைருள் கஹார் யாஹ்யா கூறினார்.
வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதது, குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களைச் செலுத்தியது, வாகன இயந்திர பதிவு எண்களில் மாற்றம் செய்தது, கார்களை வெட்டி இணைத்தது போன்ற குற்றங்களுக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த ஏல நடவடிக்கை மூலம் மொத்தம் 527,878 வெள்ளி வசூலிக்கப்பட்டதாக கூறிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல 50 லட்சம் வெள்ளி ஏலம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.








