ஷா ஆலம், நவ 1- இங்குள்ள கத்ரி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கார் ஒன்று தீப்பற்றியதில் அதன் ஒட்டுநர் கருகி மாண்டார்.
அந்த நெடுஞ்சாலையின் 3.4வது கிலோ மீட்டரில் புக்கிட் ஜெலுத்தோங் டோல் சாவடிக்கு முன்பு நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த சிவப்பு நிற மஸ்டா ரக கார் கட்டுப்பாட்டை இழந்து இடது புற சாலைத் தடுப்பை மோதி தீப்பற்றியதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
இந்த விபத்தில் கருகி மாண்ட அந்த கார் ஓட்டுநர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
அந்த ஓட்டுநரின் சடலம் சவப்பரிசோதனைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இவ்விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பில் இன்று விடியற்காலை 1.15 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்தை விரைந்த தீயணைப்பு வீரர்கள் மஸ்டா ரக க் கார் ஒன்று 100 விழுக்காடு தீயில் அழிந்து போனதைக் கண்டனர் என்றார்.
அந்த காரில் காணப்பட்ட ஓட்டுநரின் சடலத்தை மீட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் தாங்கள் ஒப்படைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








