ரவாங், அக் 22- பண்டார் பத்து ஆராங் 2030 சிறப்பு பகுதி திட்ட வரைவின் (ஆர்.கே.கே.) வெற்றியை உறுதி செய்ய அதன் தொடர்பான கருத்துகளை முன்வைக்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்திட்ட வரைவு தொடர்பான தங்கள் கருத்துகளை பொது மக்கள் செலாயாங் நகராண்மைக் கழக தலைமையகத்தின் வரவேற்புக் கூடம் மற்றும் பண்டார் பத்து ஆராங் கிராம சமூக மேம்பாட்டு நிர்வாக மன்ற அலுவலகம் மற்றும் 16வது மாடி, பிளான்மலேசியா சிலாங்கூர் ஆகிய இடங்களில் முன்வைக்கலாம் என்று மந்திரி பெசார் கூறினார்.
இந்த திட்ட வரைவு தொடர்பில் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதன் வாயிலாக பாரம்பரிய பகுதியாக விளங்கும் பத்து ஆராங்கை சுற்றுலா மையமாக தரம் உயர்த்துவதில் பொது மக்கள் தங்கள் பங்கினை ஆற்ற முடியும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அதேசமயம், அனைத்து தரப்பினரின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய மேம்பாட்டு திட்டமிடலுக்கான இலக்கையும் அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆர்.கே.கே. வரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன் அனைத்து தரப்பினரின் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்கள் கருத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் சொன்னார்.








