ஷா ஆலம், அக் 22- மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கான 2022 ஆம் ஆண்டு மலேசியா பாரா விளையாட்டுப் போட்டிக்கு (சுக்மா) எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கட்டமைப்பு 50,000 வெள்ளி நிதியதவி வழங்கியுள்ளது.
இந்த விளையாட்டு அணிக்கு முதன் முறையாக வழங்கப்படும் நிதியுதவி இதுவாகும் என்று எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
சிலாங்கூரிலுள்ள மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற கடப்பாடு மற்றும் மந்திரி புசாரின் நல்லுள்ளம் காரணமாக இந்த நிதியுதவி சிலாங்கூர் மாநில பாரா சுக்மா அணிக்கு வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
முன்பு சிரமத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதியதவி வழங்கி வந்தோம். இப்போதுதான் முதன் முறையாக அந்த குழுவுக்கு உதவி நல்கியிருக்கிறோம் என்றார் அவர்.
நேற்று இங்கு 20வது பாரா சுக்மா விளையாட்டுக்கான கொடியை சிலாங்கூர் அணியிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இப்போட்டியில் 76 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தைப் பெற சிலாங்கூர் அணி இலக்கு நிர்ணயித்துள்ள போதிலும் அதைவிட அதிக பதக்கங்களை வெல்ல முடியும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.








