கோலாலம்பூர், அக் 10- இவ்வாண்டிற்கான சிலாங்கூர் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்காட்சியில் (எஸ்.ஆர்.ஐ.இ.) 47 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாண்டு கண்காட்சியில் 112 காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் கூறினார்.
அவற்றில் 89 காட்சிக் கூடங்கள் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டன. இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவானைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் இயங்கலை வாயிலாக இந்த கண்காட்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டியிருந்தனர் என்று அவர் சொன்னார்.
ஆராய்ச்சி தொடர்பான கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கும் எதிர்காலத்தில் கூட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் உதவக் கூடிய இந்த கண்காட்சி, வெளிநாட்டு பங்கேற்பாளர்களின் தேர்வுக்குரிய ஒன்றாகவும் விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள கோலாலம்பூர் அனைதுலக மாநாட்டு மையத்தில் இந்த எஸ்.ஆர்.ஐ.இ. கண்காட்சியின் நிறைவு விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட உரைகள் மற்றும் கலந்துரையாடல்களின் போது ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் பல புதிய கருத்துகள் முன்வைக்கப் பட்டதாகவும் டத்தோ ஹரிஸ் காசிம் சொன்னார்.
இந்த கண்காட்சியையொட்டி ஐந்து பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பில் நிறுவனங்களுக்கிடையே போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.








