கோலாலம்பூர், அக் 10- பதினைந்தாவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று மாலை 3.00 மணியளவில் இங்குள்ள புத்ரா பெர்டானா கட்டிடத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம் என கடந்த செப்டம்பர் முதல் பரவி வந்த வதந்திக்கு பிரதமரின் இந்த அறிவிப்பு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
பதினான்காவது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சாசனத்தை சமர்ப்பிப்பதற்காக மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபாவை தாம் நேற்று பிற்பகல் சந்தித்ததாக பிரதமர் கூறினார்.
பதினான்காவது நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் இன்று வெளியிட்ட சிறப்பு அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு உள்நாட்டு தொலைக்காட்சி மற்றும் பிரதமரின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிப்ரப்பப்பட்டது.








