ஜாகர்த்தா, அக் 10- ரிக்டர் அளவில் 5.5ஆகப் பதிவான நிலநடுக்கம் ஜாவா தீவின் பந்தேன் கடல் பகுதியில் நேற்று ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவியில் அமைப்பு கூறியது.
எனினும், இந்த பூகம்பத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப் படவில்லை.
இந்த பூகம்பம் மேற்கு இந்தோனேசிய நேரப்படி மாலை 5.02 மணிக்கு ஏற்பட்டது. பந்தேன், லெபாக்கிலிருந்து 26 கிலோ மீட்டர் வடமேற்கில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 131 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தலைநகர் ஜாகர்த்தாவிலும் அதன் அதிர்வுகள் உணரப் பட்டதாக அது குறிப்பிட்டது.
தொடர் அதிர்வுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி பொது மக்களை அந்த வானிலை மற்றும் புவியில் அமைப்பு கேட்டுக் கொண்டது.







