புத்ரா ஜெயா, செப் 16- கம்போடியாவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக கூறிய கும்பலால் ஏமாற்றப்பட்ட மேலும் 11 பேர் நேற்றிரவு 11.55 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
கம்போடியாவில் வேலை கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மோடிக் கும்பலின் ஆசை வார்த்தையை நம்பி அந்நாட்டிற்குச் சென்ற மொத்தம் 153 பேரில் 123 பேர் இதுவரை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
ஏமாற்றப்பட்ட மலேசியர்களை அடையாளம் கண்டு மீட்பதில் உதவிய கம்போடிய அரசாங்கத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
அந்நாட்டில் இன்னும் சிக்கியிருக்கும் மலேசியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் கம்போடிய அமலாக்கத் துறையினருடன் மலேசியா தொடர்ந்து அணுக்கமாக செயல்படும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இந்த வேலை வாய்ப்புக் கும்பலால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் அது குறித்து வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








