கோல லங்காட், செப் 4- மாநில அரசின் இலவச குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகுதி உள்ளவர்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்கு எதுவாக மக்களை அணுகி அத்திட்டம் குறித்து விளக்கும்படி மோரிப் தொகுதி சேவை மையம் தனது உறுப்பினர்களைப் பணித்துள்ளது.
அந்த இலவச குடீநீர் சலுகையைப் பெறுவதற்கான சம்பள வரம்பை மாநில அரசு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தியதைத் தொடர்ந்து இந்த பிரசார நடவடிக்கையை தொகுதி மேற்கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் மேலும் அதிகமானோர் பங்கேற்று அதன் மூலம் அவர்கள் தங்களின் பொருளதாரச் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் இந்த பிரசார நடவடிக்கையை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள தாமான் ஸ்ரீ புத்ராவில் நேற்று நடைபெற்ற 2022 சிலாங்கூர் ஜாவாஃபெஸ்ட் வேளாண் சந்தை விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு லட்சம் பேர் 20 கனமீட்டர் இலவச குடிநீர் விநியோகச் சேவையைப் பெறுவர் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தேசிய தினக் கொண்டாடத்தின் போது அறிவித்திருந்தார்.
இத்திட்டத்திற்கு உண்டாகும் மூன்று கோடி வெள்ளி செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருதார்.
இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மேலும் ஒரு லட்சம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








