ஷா ஆலம், ஆக 21- மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்ட தொடரப்பட வேண்டும் என்று பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்படும் இத்திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதோடு அவர்களுக்கு பெரும் பலனையும் தந்துள்ளதாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மாநில மக்கள் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கும் காரணத்தால் மாநில அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.
நாம் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டின் மீது மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக மக்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறோம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள ஹெரித்தியர் மண்டபத்தில் நடைபெற்ற பத்து தீகா தொகுதி நிலையிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இன்றைய இந்த மருத்துவப் பரிசோதனையில் கலந்து கொள்வதற்கு இன்று நண்பகல் 12.00 மணி வரை சுமார் 900 பேர் வரை செலங்கா செயலியில் பதிவு செய்துள்ள நிலையில் இந்நிகழ்வில் 1,000 பேர் வரை பங்கேற்று பயனடைவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் உடலாரோக்கியம் மீது மிகுந்த கவனம் செலுத்துவதை இத்திட்டத்திற்கு கிடைத்துள்ள அமோக ஆதரவு புலப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.








