பட்டர்வெர்த், ஆக 19- பல்கலைக்கழகத்திற்கு பொருள்களை விநியோகிக்கும் குத்தகையை தன் சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதற்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு இங்குள்ள சென்ஷன்ஸ் நீதிமன்றம் மூன்றாண்டுச் சிறைத்தண்டனையும் 807,475 வெள்ளி அபராதமும் விதித்தது.
பேராசிரியர் முகமது படாருடின் முகமது (வயது 57) என்ற அந்த விரிவுரையாளருக்கு இத்தண்டனையை விதித்த நீதிபதி ஜூல்ஹஸ்மி அப்துல்லா, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரின் சகோதரரான 50 வயது முஸ்தாபா கமாலுக்கும் இதே தண்டனையை விதித்தார்.
அவ்விருவர் மீதும் சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்ப தவறியதால் இத்தீர்ப்பை தாம் வழங்குவதாக நீதிபதி கூறினார்.
அபராதத் தொகையைச் செலுத்த த் தவறினால் அவ்விருவரும் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக அவ்விருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ஒத்தி வைத்த நீதிபதி, அவர்களுக்கான ஜாமீன் தொகையை ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 32,000 வெள்ளியாக உயர்த்தினார்.








