ஷா ஆலம், ஜன 11- மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வரை கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 6,000 பேர் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண உதவியைப் பெற்றுள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மேலும் 40,000 மனுக்களை கிள்ளான் நில மற்றும் மாவட்ட அலுவலகம் பரிசீலித்து வருவதாக சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு கிராமங்களிலிருந்து 500 முதல் 1,000 விண்ணப்பங்களை வரை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அவர்கள் இன்னும் நிதி பெறுவதற்கு அழைக்கப்படவில்லை. அந்த விண்ணப்பங்களை மாவட்ட மற்றும் நில அலுவலகம் இன்னம் பரிசீலித்து வருவதால் பொறுமை காக்கும்படி அவர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
முன்னதாக சுங்கை காண்டீஸ் தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேர் மத்திய அரசின் 1,000 வெள்ளி வெள்ள நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டனர்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.







