ஷா ஆலம், ஜன 7- சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜனவரி மாதத்திற்கான தண்ணீர் கட்டண விலக்களிப்பு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சுமையை குறைக்க உதவும்.
இந்த திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக ஸூஹாய்னிசாம் இஸ்மாயில் (வயது 45) என்பவர் கூறினார். தாமும் தன் மனைவியும் அரசு ஊழியர்களாக இருந்த போதிலும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த சலுகை தமக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.
எந்த வகை உதவி வழங்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் சிலாங்கூர் அரசு மிகவும் பரிவுடன் நடந்து கொள்கிறது என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பலர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இச்சூழலில் பலரும் எதிர்பார்த்த சலுகைகளில் ஒன்றாக தண்ணீர் கட்ட விலக்களிப்பும் விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான தாமான் ஸ்ரீ மூடாவைச் சேர்ந்த சுமார் 10,000 பேரில் ஸுஹானிசாமும் ஒருவராவார். ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான இவர் இந்த பேரிடரில் 10,000 வெள்ளி மதிப்பிலான பொருள்களை இழந்தார்.
இவ்வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மற்றொரு நபரான முகமது ஷருள் நிஸாம் ஹசான் (வயது 30) கூறுகையில் மாதம் 60 வெள்ளியாக இருக்கும் குடிநீர் கட்டணத்தை சமையல் பொருள்களை வாங்குவதற்கு தாம் பயன்படுத்தவுள்ளதாக சொன்னார்.
இந்த தண்ணீர் கட்ட விலக்களிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் அளித்துள்ளது. வெள்ளத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.








