ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநில மக்கள், வர்த்தக சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைக்கு பயனளிப்பதை நோக்கமாக கொண்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இவ்வாண்டிற்கான 232 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டத்தை விட அடுத்த்தாண்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை சற்று அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார்.
அந்த தொகையில் 122 கோடி வெள்ளி அல்லது 52 விழுக்காடு நிர்வாகச் செலவினங்களுக்காகவும் 112 கோடி வெள்ளி அல்லது 48 விழுக்காடு மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
வரும் 2022 ஆம் ஆண்டில் 205 கோடி வெள்ளியை வருமான ஈட்ட முடியும் என மாநில அரசு மதிப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டிற்கான வருமானத்தில் நில பிரீமியத் தொகையின் மூலம் 90 கோடியே 63 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி அதாவது 44.21 விழுக்காட்டுத் தொகை பெறப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் வருமானம் 210 கோடி வெள்ளியாக இருக்கும் நிலையில் செலவினம் 232 கோடி வெள்ளியே 30 லட்சம் வெள்ளியாக உள்ளது. ஆகவே அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 22 கோடியே 27 லட்சம் வெள்ளி பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.








