ஷா ஆலம், நவ 17- கிள்ளான், ஜாலான் மெலாவிசில் உள்ள குடிசை வீடொன்றில் கடந்த வாரம் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 117,009 வெள்ளி மதிப்பிலான 40.3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் என நம்பப்படும் 21 முதல் 49 வயது வரையிலான எட்டு உள்நாட்டினரை தாங்கள் கைது செய்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சுல் அமார் ரம்லி கூறினார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது அவ்வீட்டின் முன்புறம் இருந்த மூவரையும் வீட்டினுள் இருந்த ஐவரையும் கைது செய்தோம். சிறிய பொட்டலங்களாக கட்டப்பட்டு கருப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றி மீன் தோம்பினுள் வைக்கப்பட்டிருந்த அந்த போதைப் பொருளையும் மீட்டோம் என அவர் தெரிவித்தார்.
அந்த வீட்டில் கஞ்சாவை பொட்டலமிடும் பணி கடந்த இரு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறிய அவர், அவ்வீடு சட்டவிரோதமான முறையில் மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை கொண்டிருந்ததாக சொன்னார்.
அண்மையில்தான் தருவிக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த போதைப் பொருள் சிறு பொட்டலங்களாக கட்டப்பட்டு 10 வெள்ளி விலையில் விற்கப்பட்டன என்று அவர் இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட அந்த கஞ்சாவை சுமார் 10,000 போதைப் பித்தர்களுக்கு விநியோகிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் 19 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








