செலாயாங், நவ 15- அடுத்தாண்டு தொடக்கத்தில் பள்ளி தொடங்கும் போது குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் தாமான் டெம்ப்ளர் தொகுதி 50,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பரவலுக்கு முன்னர் இத்தகைய மீண்டும் பள்ளிக்குச் திரும்புவோம் திட்டத்திற்கு 30,000 வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பலர் வேலை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக அதிக பிள்ளைகள் கொண்ட குடும்பங்களுக்கு முடிந்த அளவு உதவி வழங்க நாங்கள் முயன்று வருகிறோம் என்றார் அவர்.
இந்த உதவித் திட்டம் வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கூறிய அவர், பள்ளிச் சீருடைகள் மற்றும் எழுது பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
நேற்று இங்குள்ள கம்போங் செலாயாங் இண்டா சமூக மண்டபத்தில் நடைபெற்ற இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டதை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.








