வணக்கம், என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் சிலாங்கூர் மக்களுக்கு குறிப்பாக இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஈராண்டுகளாக பொதுமுடக்கம், கட்டுப்பாட்டு ஆணை என பல்வேறு தடைகளால் போராடிக் கொண்டிருந்த நாம் இம்முறை நண்பர்களுடனும் பாசத்துக்குரியவர்களுடனும் தீபாவளியை கொண்டாடுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். இந்த மாற்றம் நம்மை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று நாட்டைப் பீடிக்கத் தொடங்கிய பிறகு முழு அளவில் நடத்த அனுமதிக்கப்பட்ட பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. தீபாவளியின் உண்மையான பொருளை உணர்த்தும் விதமாகவும் இது அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.
தென்னிந்தியாவில் இந்த பண்டிகையை கிருஷ்ண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகின்றனர். நரகாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி வந்ததாகவும் துன்பம் தாளாத மக்கள் கிருஷ்ண பகவானிடம் முறையிட்டதைத் தொடர்ந்து பகவான் அந்த அரக்கனுடன் சமர் புரிந்து அவனை வதம் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இருளும் இன்னலும் நிறைந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றதை குறிக்கும் விதமாக மக்கள் விளக்குகளை ஏற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் இந்த பண்டிகை இந்து மத இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இராமபிரான் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு இராவணனை வென்று தன் மனைவி சீதையுடன் அயோத்தி திரும்புவதை மக்கள் ஒளியேற்றி கொண்டாடும் விதமாக இந்த தீபாவளி அனுசரிக்கப்படுதாக கூறப்படுகிறது.
எது எப்படியிருப்பின், இருள் மறைந்து ஒளி பிறக்கும் தருணத்தை விளக்கேற்றி கொண்டாடுவதுதான் இந்த பண்டிகையின் அடிப்படை தத்துவமாக விளங்குகிறது.
இந்த தருணத்தைப் பயன்படுத்தி மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








