ஷா ஆலம், அக் 29- சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் துணைத் தலைவராக முன்னாள் கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு டாக்டர் மஸ்லி நன்றி தெரிவித்துக் கொண்டார். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை இயன்ற வரை சிறப்பான முறையில் ஆற்றுவேன் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தினால் வழிநடத்தப்படும ராஜா துன் ஊடா நூலகம் மிகவும் வெற்றிகரமான மற்றும் ஆக்கத் தன்மைமிக்க நூலகமாகவும் நவீன அம்சங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சிந்தனையில் உருவான இந்த திட்டம் மாற்றுத் திறனாளிகள், குடும்பத்தினருடன் வருவோர் மற்றும் இளம் தலைமுறையினருக்கு நட்புறவானதாகவும் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
இந்த நியமனத்திற்காக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் தலைவரும் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.








