ஷா ஆலம், அக் 29- வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படாது எனத் தாம் நம்புவதாக சமூக பொருளார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
வேலை இழப்பு மற்றும் வருமான பாதிப்பு போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருக்கும் மக்களுக்கு அரசாங்கமே தற்போது ஊன்றுகோலாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.
கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம், மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், வீடுகளை பழுதுபார்க்கும் மற்றும் நிர்மாணிக்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும். இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டால் வரும் 2022 ஆம் ஆண்டிற்கான சமூக நலத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பில் கார் பழுதுபார்ப்பு பட்டறை உரிமையாளரான எம். பத்துமலையிடம் வாகன பழுது பார்ப்பு கருவிகளை வைக்கும் உபகரணத்தை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.








