MEDIA STATEMENT

சுகாதார தன்னார்வலர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு-மந்திரி புசார்  தகவல்

14 அக்டோபர் 2021, 7:59 AM
சுகாதார தன்னார்வலர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு-மந்திரி புசார்  தகவல்

செலாயாங், அக் 14-  சுக்கா எனப்படும் சிலாங்கூர் சுகாதார சமூக தன்னார்வலர் திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். பொது சுகாதாரம் குறிப்பாக கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த தன்னார்வலர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இணைந்த 18 வயதுக்கும் மேற்பட்ட உடலாரோக்கியம் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த உறுப்பினர்கள் சுகாதாரம் தொடர்பான பின்னணியைக் கொண்டிராத காரணத்தால் அவர்களுக்கு பொருத்தமான பயிற்சிகள் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அந்த உறுப்பினர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு நேரடியாகவும் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மக்களுக்கு உதவும் பணிகளை அவர்களால் எளிதாக மேற்கொள்ள இயலும் என அவர் கூறினார்.

இந்த தன்னார்வலர் திட்டத்திற்காக 12 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 18,000 வெள்ளி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

சிலாங்கூர் ஆரோக்கியமான மற்றும் மேம்பாடடைந்த மாநிலமாக உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று இந்த தன்னார்வலர் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது முதல் இந்த சுக்கா அமைப்பு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. கோவிட்-19  நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்வது, கிருமி நாசினி தெளிப்பது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை சோதிப்பது, தடுப்பூசி மையங்களில்  பணியாற்றுவது போன்ற நடவடிக்கைகளை இதன் உறுப்பினர்கள் மேற்கொண்டனர் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.