ஷா ஆலம், ஆக 11- சிலாங்கூரில் நீர் தூய்மைக்கேடு விஷயத்தில் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று மந்திரி புசார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நீர் மாசுபாடு தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதில் லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் துரிதமாக செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி காகித சுத்திகரிப்பு தொழிற்சாலையின் நடவடிக்கை காரணமாக சுங்கை லங்காட் ஆற்றில் ஏற்பட்ட நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்னைக்கு லுவாஸ் விரைவாக தீர்வு கண்டதாக அவர் சொன்னார்.
காகித சுத்திகரிப்பு தொழிற்சாலை சம்பந்தப்பட்ட மூன்று நீர் மாசுபாடு சம்பவங்கள் சுங்கை லங்காட் ஆற்றில் கண்டறியப்பட்டு அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நீர் தூய்மைக்கேடு விவகாரத்தில் மாநில அரசு ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீர் மாதிரி சோதனைக்குட்படுத்தப்பட்டதில் அங்குள்ள நீர் சேகரிப்பு குளத்திலுள்ள நீர் நல்ல நிலையிலும் மாசுபடாமலும் உள்ளது கண்டறியப்பட்டது என்று லுவாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.








