கோலாலம்பூர், ஆக 4- பிரதமராக நீடிப்பதற்கு தமக்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக டான்ஸ்ரீ மொகிடின் யாசின் இன்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முதஸ்தாபா பில்லா ஷாவுடன் இன்று இஸ்தானா நெகாராவில் நடத்திய சந்திப்பின் போது இவ்விகாரத்தை முன்வைத்ததாக அவர் சொன்னார்.
ஆகவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 43(4)வது பிரிவின் கீழ் நான் பதவி விலக வேண்டும் என்பதற்கான அவசியம் எழவில்லை என்று அவர் கூறினார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் இந்த அறிவிப்பை உள்நாட்டு தொலைக்காட்சிகள் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
பிரதமர் என்ற முறையில் தமது நிலை குறித்து அடிக்கடி கேள்வியெழுப்பப்பட்டு வருவதை தாம் உணர்ந்துள்ளதாக மொகிடின் சொன்னார்.
இதனைக் கருத்தில் கொண்டு நான் சட்டப்பூர்வ நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கவுள்ளேன் என்று மாமன்னரிடம் நான் தெரிவித்துள்ளேன் என்றார் அவர்.
வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் போது தம்மீதான நம்பிக்கைத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த தீர்மானத்தின் வழி பிரதமர் என்ற முறையில் எனது நிலையும் ஆளும் அரசாங்கம் என்ற நிலையில் பெரிக்கதான் நேஷனல் கூட்டணியின் நிலையும் சட்டப்பூர்வமாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் உறுதி செய்யப்படும் என அவர் சொன்னார்.








