ஷா ஆலம், ஜூன் 19- சந்தையில் விற்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என பொது மக்களை சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகள் போலியானவையாக அல்லது அங்கீகரிக்கப்படாத தரப்பிடமிருந்து வந்தவையாக இருப்பதற்கு சாத்தியம் உள்ளதோடு அதன் தரம் குறித்து எந்த உத்தரவாதமும் கிடையாது என்று அமைச்சு கூறியது.
தற்போதைக்கு தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகத்து வருகிறது. இணையம் உள்பட வேறு எந்த வகையிலும் தடுப்பூசிகளை விநியோகிக்க அல்லது விற்க அனுமதிக்கப்படவில்லை என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
பொறுப்பற்றத் தரப்பினரின் மோசடி வலையில் சிக்கி ஏமாந்து விடவேண்டாம் என்றும் பொது மக்களை அமைச்சு எச்சரித்தது.
தடுப்பூசி பெறுவதற்கு தங்களுக்கான தருணம் வரும் வரை பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதோடு மைசெஜாத்ரா செயலி வாயிலாக அதற்கான முன்பதிவையும் செய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.








