கோலாலம்பூர், ஜூன் 18- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறும் தொழில்துறையினருக்கு இனி எச்சரிக்கை விடுக்கப்படாது. மாறாக உடனடியாக குற்றப்பதிவுகள் வழங்கப்படும்.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்புக்கு தொழிற்சாலை தொற்று மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனடின் கூறினார்.
இந்நிலை நீடித்தால் கோவிட்-19 நோய்த் தொற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. தொழில்துறையினர் எஸ்.ஒ.பி. விதிமுறையை முறையாக பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நமது முயற்சிகள் பலனற்று விடும். ஆகவே விமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி முதலாளிகளை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பல தொழிற்சாலைகளுக்கு வருகை புரிந்து எஸ்.ஒ.பி. விதிமுறைகளை சோதனையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றுதான் கடைசி தினம் என தொழில்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.ஒ.பி. விதிமீறல் தொடர்பில் அத்துறையிடமிருந்து இனி எந்த காரணத்தையும் செவிமடுக்க நாங்கள் தயாராக இல்லை என அவர் தெரிவித்தார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதி மீறல் தொடர்பில் கடந்த ஜூன் முதல் தேதி தொடங்கி இதுவரை 40 தொழிற்சாலைகளுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.








