ஷா ஆலம், ஜூன் 18- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை ஸ்ரீ செத்தியா மற்றும் தாமான் மேடான் தொகுதிகளில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த பரிசோதனை இயக்கம் ஜாலான் பிஜேஎஸ் 6/1 கம்போங் லிண்டோங்கானில் காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாகவும் எனும் https://screening.selangkah.my/login/ அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனை இயக்கத்தின் போது ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை சுங்கை துவா, கோம்பாக் செத்தியா மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதிகளில் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது தவிர காஜாங் தொகுதியில் ஜூன் 26ஆம் தேதியும் உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாரா பங்சா தொகுதியில் ஜூன் 27 ஆம் தேதியும் பரிசோதனை இயக்கம் நடைபெறும்.








