கோலாலம்பூர், ஜூன் 16- ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய சீனாவின் கேன்சினோ மற்றும் அமெரிக்காவின் ஜோன்சன்&ஜோன்சன் கோவிட்-19 தடுப்பூசிகளை அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
உலக சுகாதார நிறுவத்தின் ஆதரவிலான கேவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஜோன்சன்&ஜோன்சன் தடுப்பூசிகள் தருவிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது. எனினும், கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அது தெரிவிக்கவில்லை.
35 லட்சம் கேன்சினோ தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டரசு அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆயினும் அந்த தடுப்பூசிகள் இன்னும் நாடு வந்து சேரவில்லை.
தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் நோய்த் தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கே தற்போதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டாலும் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகளை 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குச் செலுத்த சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
மலேசியா இதுவரை 7 கோடியே 95 தடுப்பூசிகளைப் பெறுவதில் வெற்றி கண்டுள்ளது. நாட்டு மக்கள் தொகையில் 125 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்த இது போதுமானதாகும். கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளில் பிரிட்டனின் அஸ்ட்ராஸேனேகா மற்றும் சீனாவின் சினோவேக் தடுப்பூசிகளும் அடங்கும்.
இம்மாதம் மற்றும் அடுத்த மாதத்தில் 13 லட்சம் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகள் மலேசியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தாய்லாந்திலுள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 22 லட்சம் அஸ்ட்ராஸேனோ தடுப்பூசிகளை மலேசியா பெறுவதில் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கள் கிழமை வரை 32 லட்சத்து 80 ஆயிரம் பேர் அதாவது நாட்டு மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.








