கோலாலம்பூர், ஜூன் 14- கடந்த மாதம் 24 ஆம் தேதி நிகழ்ந்த எல்.ஆர்.டி. இரயில் விபத்துக்கு எந்த தரப்பு மீதும் குற்றம் சுமத்த முடியாது என போக்குவரத்து அமைச்சம் அவ்விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அமைச்சின் விசாரணைக் குழுவும் எந்த சூழ்நிலையிலும் கூறியதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது போல் அந்த விபத்து தொடர்பான விசாரணையில் எதுவும் மூடி மறைக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
அந்த விசாரணைக் குழுவின் பணி அச்சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வது மட்டுமே ஆகும். அது நீதித்துறை அல்ல. ஆகவே, யார் குற்றவாளி என தீர்மானிக்கும் அதிகாரம் அக்குழுவுக்கு இல்லை என்றார் அவர்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது உள் விசாரணை அல்லது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அது பிராசரானா நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
‘எந்த தரப்பையும் பொறுப்புதாரியாகவோ குற்றவாளியாகவோ ஆக்கும் நோக்கம் கிடையாது‘ என்ற வாசகம் யாரும் குற்றவாளி கிடையாது என்ற பொருளை தரவில்லை என்பது தமது கருத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழிநுட்ப பிரச்னைகளும் கட்டுப்பாட்டு அறைக்கும் இரயில் ஓட்டுநருக்கும் இடையிலான தொடர்பு முறையில் ஏற்பட்ட கோளாறுகளும் இந்த விபத்துக்கான காரணங்களில் அடங்கும் என்று இம்மாதம் 10ஆம் தேதி அமைச்சர் வீ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








