கோலாலம்பூர், ஜூன் 7- நாட்டில் இன்று 5,271 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 6,241 ஆக இருந்தது. நான்காவது நாளாக தொடர்ச்சியாக கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மே 19ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக உயர்வு கண்டு வந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை முதன் முறையாக இன்று ஆறாயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை மொத்தம் 622,086 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் 1,374 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளையில் சரவா (703), நெகிரி செம்பிலான் (571), கோலாலம்பூர் (455), ஜொகூர் (355), கிளந்தான் (341), சபா (336), லபுவான் 209), கெடா (194) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் மலாக்காவில் 178 சம்பவங்களும் பேராக்கில் 177 சம்பவங்களும் பினாங்கில் 153 சம்பவங்களும் திரங்கானுவில் 117 சம்பவங்களும் பகாங்கில் 99 சம்பவங்களும் புத்ரா ஜெயாவில் 8 சம்பவங்களும் பெர்லிசில் ஒரு சம்பவமும் பதிவானதாக அவர் சொன்னார்.








