ஷா ஆலம், ஜூன் 6- கால்நடைகளை எல்.எஸ்.டி. எனப்படும் பெரியம்மை நோய்த் தாக்காமலிருப்பதை உறுதி செய்ய பண்ணைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும்படி மாடு மற்றும் எருமை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பண்ணைக்கு வெளியிலிருந்து ஆட்கள் வருவதை கட்டுப்படுத்துவதோடு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும்படி பண்ணை உரிமையாளர்களை விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் வலியுறுத்தினார்.
கொசுக்கள் மற்றும் ஈக்களை ஒழிப்பதற்கு இயந்திரம் வழி மற்றும் பாரம்பரிய முறையில் புகை போடும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என ஆலோசனை கூறிய அவர், புதிய கால்நடைகளை வாங்குவது அல்லது கால்நடைகளை இடமாற்றம் செய்யவதற்கு சுகாதார சான்றிதழைப் பெறுவது அவசியம் என்றார்.
காய்ச்சல் அல்லது பெரியம்மை நோய்க்கான அறிகுறியைக் கொண்டிருக்கும் கால்நடைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்பதோடு அது குறித்து மாநில கால்நடை சேவைத் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்டு மலேசியாவில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 42 மாடுகளுக்கு அந்நோய் இருப்பதை மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை இலாகா கண்டு பிடித்தது.
பாதிக்கப்பட்ட மாடுகளுடன் சேர்த்து மொத்தம் 1,434 மாடுகள் தாய்லாந்திலிருந்து நாட்டிக்குள் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.








