கோலாலம்பூர், ஜூன் 6- கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்களின் வயது வரம்பை பதினெட்டிலிருந்து பதினாறாக குறைக்க கட்சியின் இளைஞர் பிரிவு பரிந்துரைத்துள்ளது.
இளைஞர்களின் குரலுக்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த பரிந்துரையை தாங்கள் முன்வைத்துள்ளதாக கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் நஸ்ருல்லா முகமது நாசீர் கூறினார்.
எங்களின் இந்த பரிந்துரையை கட்சியின் தலைமைத்துவ மன்றம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம். இது சவால்மிக்க பணியாக இருந்தாலும் இளைய தலைமுறையினரின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.
2020ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டில் விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான் எந்த இயக்கத்திலும் சேர முடியும் என்ற சங்க பதிவக விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டிய இன்றைய இளைஞர்கள் உள்ளனர்.
ஆகவே, இளைஞர்களின் குரலுக்கு தடைவிதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் இவ்விவகாரம் மீது உள்துறை அமைச்சர் கவனம் செலுத்துவார் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மாநாட்டில் கலந்து கொண்ட 14 இளைஞர் பிரிவு பேராளர்கள் சுகாதாரம், தலைமைத்துவம், அரசியல், அவசரகாலம் பிரகடனம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விவகாரங்கள் மீதான விவாத்தில் கலந்து கொண்டனர்.








