கோலாலம்பூர், ஜூன் 5- மக்களவை மற்றும் மேலவை கூட்டங்களை இயங்கலை வாயிலாகவும் உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பின் மூலமாகவும் நடத்துவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
கோவிட்-19 நோய்த் தொற்றுக காலத்தில் நாடாளுமன்றம் தனது பங்கினை உரிய முறையில் ஆற்றுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கூறினார்.
இவ்விரு வழி முறைகளில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் மக்களைவை மற்றும் மேலவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுடன் தாம் இயங்கலை வாயிலாக விவாதித்துள்ளதாக அவர் சொன்னார்.
அடிப்படை வசதிகள், நுட்ப அம்சங்கள், சட்டம், விதிமுறை மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து அச்சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர்களின் பங்கேற்பை அடிப்படையாக கொண்டு இயங்கலை வாயிலாகவும் நேரடியாகவும் நாடாளுமன்றத் கூட்டத் தொடரை நடத்துவதற்கு அக்கூட்டத்தில் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.








