பந்திங், ஜூன் 3- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதன் வழி, சாலைத் தடுப்புச் சோதனைகளில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்படுவதை தவிர்க்க முடியும் என்று கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் நிர்வாகி டாக்டர் அதிகா அதிரா அப்துல் வாஹிட் கூறினார்.
சாலைத் தடுப்புகளில் நிறுத்தப்படும் பட்சத்தில் செலங்கா செயலியின் குறியீட்டை காட்டினால் போதுமானது என்று அவர் சொன்னார்.
இலவச கோவிட்-19 பரிசோதனையை விரைவுபடுத்துவதற்கு மட்டும் செலங்கா செயலி உதவவில்லை. மாறாக, பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு இடையூறின்றி செல்வதற்கும் உதவி புரிகிறது என்றார் அவர்.
சாலைத் தடுப்புகளில் தடுத்து நிறுத்தப்படும் பட்சத்தில் கவலைப்பட வேண்டாம். இத்தகைய பரிசோதனை இயக்கங்கள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் தலைமையகங்களுடன் தொடர்பில் இருந்து வருவோம் என அவர் கூறினார்.
அரசாங்க நிறுவனங்கள் வழங்கி வரும் அணுக்கமான ஒத்துழைப்பு காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தாங்கள் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.








