ECONOMY

அவசரகாலச் சட்டத்தின் கீழ் 21 விசாரணை அறிக்கைகள் திறப்பு- 10 பேர் கைது

2 ஜூன் 2021, 9:13 AM
அவசரகாலச் சட்டத்தின் கீழ் 21 விசாரணை அறிக்கைகள் திறப்பு- 10 பேர் கைது

கோலாலம்பூர், ஜூன் 2- நாட்டில் அவசரகாலச் சட்டம் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  அமல்படுத்தப்பட்டது முதல் அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டத்தின் (எண் 2) கீழ்  21 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 நோய்த் தொற்று அல்லது 2021ஆம் ஆண்டு அவசரகால பிரகடனம் குறித்த பொய் செய்திகளை உருவாக்கியது மற்றும் பரப்பியது தொடர்பில் இந்த விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

இதன் தொடர்பான விசாரணைகளை வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப்பிரிவு,  புரோசிகியூஷன் மற்றும் சட்டப் பிரிவு (டி5) மற்றும் மாநில போலீஸ் தலைமையகங்கள் நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

தகவல் சாதனங்களில் குறிப்பாக சமூக ஊடகங்கள் வழி பொய்ச் செய்திகளை பரப்ப முயலும் தனி நபர்கள் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கைது ஆணை இன்றி தடுத்து வைக்க அரச மலேசிய போலீஸ் படைக்கும் தொடர்பு மற்றும் பல்முனைத் தகவல் ஆணையத்திற்கும் இந்த அவசரகாலச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம்  மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் தமது துறை பத்து பேரை இதுவரை கைது செய்துள்ளதாக அக்ரில் சானி குறிப்பிட்டார்.

அவர்களில் மூவருக்கு சட்டத்துறை தலைவர் அலுவலகம் குற்றப்பத்திரிகைகளை வழங்கியுள்ள நிலையில் மேலும் எழுவர் விசாரணை முடியும் வரை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.