ஷா ஆலம், மே 29- சட்டவிரோத கிடங்கு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் கம்யூனிஸ்டு பயங்கவாதிகளுக்குச் சொந்தமானவை என்று காணொளி ஒன்றில் பரவலாகி வரும் செய்தியில் உண்மை இல்லை என்று சிலாங்கூர் மாநில போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அந்த காணொளியில் காட்டப்படும் செய்தியாளர் கூட்டம் மாற்றியமைக்கப்பட்ட சுடும் ஆயுதங்களை வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டது தொடர்பில் கடந்தாண்டு ஜூலை 30ஆம் தேதி சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடத்தப்பட்டது என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
அதே சமயம், அந்த காணொளியில் இடம் பெற்றுள்ள படங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஆயுதக் கைப்பற்றல் தொடர்பில் கெடா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்டவை என அவர் தெளிவுபடுத்தினார்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தையும் கெடாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் படங்களையும் இணைத்து அவை விடுதலைப் புலிகள் மற்றும் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளுடன் தொடர்பு படுத்தப்படுத்தி காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி அடிப்படையற்றது என்பதோடு பொது மக்கள் மத்தியில் பயத்தையும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233 வது பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 505(பி) பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொறுப்பற்றத் தரப்பினரால் பரப்பப்படும் அடிப்படையற்ற செய்திகளை பொதுமக்கள் நம்பக்கூடாது என்பதோடு அதனை பிறருடன் பகிரவும் கூடாது என்றும் அவர் கூறினார்.








