கோலாலம்பூர், மே 27- இரயில் விபத்து காரணமாக பழுதடைந்த கிளானா ஜெயா எல்.ஆர்.டி.தடம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட முன்னதாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் சிதறிக் கிடந்த இரயில்களின் உடைந்த பாகங்கள் உடனடியாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இரயில் போக்குவரத்தை மீண்டும் தொடக்குவதற்கான அனுமதியை பொது தரைப் போக்குவரத்து நிறுவனம் வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
அப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதோடு விபத்தில் சிக்கிய இரயில்களும் நேற்றிரவு கிளானா ஜெயாவிலுள்ள பழுதுபார்ப்பு பட்டறைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
கிளானா ஜெயா தடத்தில் குறிப்பாக விபத்து நிகழ்ந்த பகுதியில் இரயில் பயணத்தை சீராக மேற்கொள்வதற்கான சாத்தியத்தை ஆராயும் பொருட்டு காலியான இரயில்கள் அந்த தடத்தில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அத்தடத்தில் அனைத்து 58 இரயில் சேவைகளையும் மீண்டும் தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.








