ஷா ஆலம், மே 26- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பௌத்த சமயத்தினருக்கு மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விசாக தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பிரகாசத்தின் அடையாளமாக விளங்கும் இந்த விசாக தினத்தை மீண்டும் ஒரு முறை கொண்டாடுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றுள்ள பௌத்த சமயத்தினர் அனைவருக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
சிங்கள மொழியில் வைசாக் என அழைக்கப்படும் சொல் இந்தியாவின் ஏப்ரல்-மே மாதங்களை குறிப்பிடும் வைசாகம் எனும் சொல்லில் இருந்து மருவி வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கமாக பௌத்த சமயத்தினர் இத்திருநாளின் போது காலையில் எழுந்து பௌத்த ஆலயங்களுக்குச் சென்று புத்தரை வழிபாடு செய்வார்கள்.
எனினும், கடந்தாண்டைக் போலவே இவ்வாண்டும் அத்தகைய வழிபாடுகளை நடத்தும் சூழலில் நாம் இல்லை. கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சமய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரை பொறுத்த வரை நாம் அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சுகாதார நிபுணர்கள் தரும் ஆலோசனையைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இவ்வாண்டு விசாக தினத்தை ஆலயங்களில் கொண்டாட முடியாவிட்டாலும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக குடும்பத்தாருடன் விழாவை கொண்டாடுவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொள்வோம் என விசாக தின வாழ்த்துச் செய்தியில் மந்திரி புசார் குறிப்பிட்டுள்ளார்.








