கோலாலம்பூர், மே 25- எல்.ஆர்.டி. இலகு ரயில் விபத்தில் சிக்கிய அனைவருக்கும் பிராசாரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் தலா ஆயிரம் வெள்ளி உதவித் தொகையையும் இதர உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
இவ்விவாரம் தொடர்பில் தாம் பிரசாரானா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிராசாரானா குழுமத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.
இந்த விபத்தில் 213 பேர் காயமடைந்த வேளையில் அவர்களில் 64 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் மூவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் முடிவெடுத்துள்ளோம். விபத்தில் சிக்கிய அனைத்து 213 பயணிகளுக்கும் தலா ஆயிரம் வெள்ளியை உதவித் தொகையாக வழங்கவுள்ளோம் என்றார் அவர்.
இதுதவிர, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு அவர்கள் குணடைந்து வீடு திரும்பும்வரை சிகிச்சைக்கான அனைத்து கட்டணங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் கிளானா ஜெயா தடத்தில் பயணித்த இரு இலகு ரயில்கள் கம்போங் பாரு நிலையம் மற்றும் கே.எல்.சி.சி, நிலையம் ஆகியவற்றுக்கு இடையே மோதிக்கொண்டதில் 213 பேர் காயமடைந்தனர்.








