ஷா ஆலம், மார்ச் 13- தங்கள் வயல்கள் நெல் உற்பத்திற்கு உகந்ததாக இல்லாத பட்சத்தில் பணப்பயிர் எனப்படும் அதிக லாபம் ஈட்டித் தரக்கூடிய பயிர்களை நடவு செய்வதற்கான சாத்தியத்தை ஆராயும்படி சுங்கை பாஞ்சாங் மற்றும் பாகான் தெராப் பகுதி விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், அப்பகுதியிலுள்ள நிலத்தின் தன்மை மீது மலேசிய கருவள நிறுவனம் மேற்கொண்டு வரும் ஆய்வின் முடிவுகள் தெரியும் வரை சம்பந்தப்பட்ட விவசாயிகள் பொறுமை காக்க வேண்டும் என்று கிசிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். இப்பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டவுடன் நெல் போன்ற வாழ்வாதாரப் பயிர்களுக்குப் பதிலாக அதிக லாபம் ஈட்டித் தரக்கூடிய பயிர்களுக்கு மாற அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார் அவர்.
அப்பகுதியில் நெல் பயிரிடுவதற்கு சாத்தியம் இல்லாது போகும் பட்சத்தில் அங்கு பொருத்தமான இதர பயிர்களை பயிரிடுவது தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசக சேவையைப் பெற்றுத் தருவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் ஜூலை மாதத்தில் நெல் மறுநடவு செய்யப்படுவதற்கு முன்னர் பிரச்னைக்குரிய அந்த 1,500 ஹெக்டர் நிலத்தின் தன்மை குறித்து மலேசிய கருவள நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும்.







