கோலாலம்பூர், மார்ச் 13- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றத் தவறிய குற்றத்திற்காக 330 பேருக்கு 10,000 வெள்ளி அபராதத் தொகைக்கான குற்றப்பதிவுகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை 330 பேருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதத் தொகைக்கான குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
2021ஆம் ஆண்டு (திருத்தம் செய்யப்பட்ட) தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அவசரகாலச் சட்டம் இம்மாதம் 11ஆம் தேதி ஆர்ஜிதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிமுறை மீறல் குற்றங்களுக்கான அபராதம் 1,000 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதாக டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
மக்களை கடுமையாக தண்டிப்பதற்காகவோ அவர்களிடமிருந்து அதிகத் தொகையை அரசாங்கம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவோ அபராதத் தொகை அதிகரிக்கப்படவில்லை. மாறாக, எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தொடர்ந்து மீறுவோருக்காகவே இச்சட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
முகக் கவசம் அணியாதது, .கூடல் இடைவெளியைக் கடைபிடிக்காதது, வணிக மையங்களில் உடல் உஷ்ணத்தை அளவிடும் கருவியை வைக்காதது போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.








