கோவிட்-19 பொய்ச் செய்தி பரப்புவோருக்கு வெ.100,000 அபராதம், 3 ஆண்டுச் சிறை
கோலாலம்பூர், மார்ச் 12- கோவிட்-19 நோய்த் தொற்று அல்லது அவசரகாலப் பிரகடனம் குறித்து பொய்யான தகவல்களை உருவாக்குவோர் அல்லது பரப்புவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்.
இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு இன்று தொடங்கி ஒரு லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்றாண்டு வரையிலானச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அடுத்தடுத்து புரியும் குற்றங்களுக்கு வழக்கு முடியும் வரை தினசரி 1,000 வெள்ளிக்கும் குறைவான அபராதம் விதிக்கப்படும்.
2021ஆம் ஆண்டு அத்தியாவசிய அவசரகாலச் சட்டம்(எண்.2) இன்று ஆர்ஜிதம் செய்யப்படுவதைத் தொடர்ந்து இந்த தண்டனைகள் அமலுக்கு வருவதாக சட்டத் துறை தலைவர் அலுவலகம் நேற்று வெளியிட்ட கூட்டரசு அரசாங்க அதிகாரத்துவ பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
அரசியலமைப்புச் சட்டத்தின் 150வது அதிகாரத்தின் (2பி) பிரிவின் கீழ் இந்த சட்டத்திற்கு மாமன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
கட்டுரைகள், காணொளி, குரல் பதிவு அல்லது எழுத்துக்கள் மற்றும் கருத்துக்களை வாயிலாக வெளியிடப்படும் பொய்யான அல்லது பகுதி பொய்யான கோவிட்-19 அல்லது அவசரகாலப் பிரகடனம் குறித்த தகவல்கள், செய்திகள், தரவுகள் போன்றவை ‘உண்மைக்கு மாறான செய்திகள்‘ என இச்சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.








