ஷா ஆலம், ஜூலை 30-
மாநில மந்திரி பெசார் என்ற தகுதி அடிப்படையில் பிரிகேடியல் ஜெனரல் எனும் கௌரவ விருது வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிலாங்கூரின் வாதானியா ராணுவத்தின் செயற்குழுவின் அறங்காவலராக தாம் பதவி வகிப்பதாலேயும் இந்த விருது தமக்கு அளிக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“இந்த விருதுக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. இது மலேசிய ராணுவப் படை எனக்கு வழங்கியது. இதில் வேறு எந்தவொரு விவகாரமும் இல்லை.”
“என்னைப் பொறுத்த மட்டில் இதில் எந்தவொரு தவறும் இல்லை. இந்த விருது தற்காப்பு அமைச்சர் முன்னிலையில் எனக்களிக்கப்பட்டது” என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஜூலை 23ஆம் நாள் ராணுவத்தின் கௌரவ பிரிகேடிய ஜெனரல் விருதை அமிருடினுக்கும் மலாக்கா முதல் அட்லி ஜஹாரிக்கும் தற்காப்பு அமைச்சு வழங்கியது.
முன்னதாக, ராணுவ கௌரவ விருதுகள் அரசியல்வாதிகள் அல்லது பொது மக்களுக்கு வழங்கப்படாதிருப்பதைத் தாம் உறுதி செய்யப்போவதாக தற்காப்பு அமைச்சர் முகமது சாபு கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயினும், கடந்த மே 24ஆம் தேதி நடப்புக்கு வந்த 575ஆவது ராணுவப் படை மன்றம் அங்கீகரித்த சட்டத்தின் படி மாநில அளவில் ராணுவப் படை செயற்குழுவின் அறங்காவல் பொறுப்பை வகுக்கும் சிலாங்கூர் மந்திரி பெசாரும் மலாக்கா முதல்வரும் இந்த கௌரவ விருதுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் ஓர் அறிக்கை வழி விளக்கமளித்துள்ளது.








